Tuesday, September 19, 2017

piraiyum paampum udai peruman

 5.92 காலபாசக் குறுந்தொகை



குறிப்பு: காலன், கூற்றுவன், யமன், நமன் என்றெல்லாம் அழைக்கப் படும் தருமராசனின் தூதுவர்கள் உயிர்களின் பிரார்த்துவ வாழ்வு முடிகையில் சொர்க்க நரகங்களில் சேர்ப்பதற்காக வந்து பாசக்கயிற்றில் கட்டி இழுத்து செல்வார்கள்

ஆனால் யமனுடைய இந்த அதிகாரம் "திருநீறு பூசிய சிவநேயச் செல்வர்களிடம் செல்லுபடியாகாது"

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல்கூற்று உதைத்தவன் நம் இறைவன் அவன் தம் தமர்களாகிய சிவனடியார்கள் கடுநரகில் வீழ்வதில்லை, ஒரு தரம் "சிவாயநம" என்று சொன்னவர்க்கே சாலோக முக்தி கிடைக்கும் என்னும் போது காலதூதுவர்களுக்கு அடியார்களிடம் என்ன வேலை இருக்க முடியும்!!??

மீறிச் சென்று அடியார்களை துன்புறுத்தினால் யமன் உதைவாங்கி உருண்டோடி ஒழிந்து போனதை நினைத்துப் பாருங்கள் என்று அப்பர் பெருமான் காலதூதுவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக இக்குறுந்தொகை அமைவதால் இதனை "காலபாசக் குறுந்தொகை" என்கிறோம்

நமன் தூதுவீர்!! என்று எமதூதர்களை அழைத்து அருகே அமர வைத்துக் கொண்ட அப்பரடிகள். இருந்து கேள்மின்!! இன்னுங் கேள்மின்!! மற்றுங் கேள்மின்!! என்று தங்கவைத்து சிவனடியார்கள் இருக்கும் திசைக்குக் கூட சென்றுவிடாதீர்கள் பின் உங்கள் தலைவன் உதை வாங்கியதைப் போல வாங்க வேண்டிவரும் என்று எச்சரித்து இப்பாடல்களை நயமுடன் பாடுகிறார்

பாடல் 3-9

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகிலுமாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீர் இங்கு நீங்குமே.

சாற்றினேன் சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்றவுங் களிப்பட்ட மனத்தராய்ப்
போற்றி என்று உரைப்பார் புடை போகலே.

இறையென் சொல் மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப்பெருமான் தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணிவார் எதிர்செல்லலே

வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்று இலராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசனடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்
புடைபுகாது நீர் போற்றியே போமினே.

விச்சையாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்சமெய்தி அருகணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்செழுத்தாகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாரையுஞ் சாரலே.

பொருள்

யமதூததர்களே!!கார்காலத்திலே மலர்கின்ற கொன்றையின் மணமிக்க மலர்களை அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக ; அவர்களை நீர் சாரப்பெறாதீர் ; நீங்குவீராக .

சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும் , காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல் .

நமன் தூதுவர்களே ! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர் ; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிரில் கூட நீங்கள் போய்விடாதீர்கள்

வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந் திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும் , தூபமும் , மாலையும் , தண்ணிய நறுவிய சாந்தமும் , பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல் .

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே ! நமது ஈசன் அடியரை அடையாதீர் ; இடபத்தை
ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக .

வித்தையாவதும் , விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே ; அச்சம் கொண்டு , பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக .

இன்னும் கேட்பீராக ; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா .


manthiramum thanthiramum marunthumaagi

6.54 திருப்புள்ளிருக்கு வேளூர் திருத்தாண்டகம்

குறிப்புபுள் ஆகிய சடாயு இருக்காகிய வேதம் வேள் ஆகிய முருகன் ஊராகிய சூரியன் வழிபட்ட தலமாதலின் புள்ளிருக்கு வேளூர் ஆயிற்று

தரணியெங்கும் பிறவிநோயால் பீடிக்கப்பட்ட உயிர்களுக்கு பிணிதீர்க்கும் மகாவைத்தியனான சிவபரம்பொருள் புற்றுருவில் எழுந்தருளியுள்ள தலம்

செல்வமுத்துக்குமர சுவாமி என்னும் அறுமுகச்செவ்வேள் இத்தலத்தின் விசேடமூர்த்தியாவார்

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான் என்பது புகலிப்பிள்ளையர் வாக்கு

கள்ளார்ந்த பூங்கொன்றை என்னும் பாடலில் சிவபரம்பொருளை சாடாயு சம்பாதி பூசித்த திறங்களையும் சீதாபிராட்டியிடம் அத்துமீறிய இராவணனை இப்பறவையோர் பொருதழித்த மகத்துவத்தையும் வியந்தும் பாடியிருப்பார் சம்பந்தப்பெருமான்

ஆண்டானை என்று துவங்கும் அப்பரடிகளின் தாண்டக வரிகள் தமிழ் நூல்களுக்கு ஓர் மணிமகுடமாகத் திகழும் வரிகள்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்தருள வல்லான்தன்னை புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே என்று பாடும் அப்பர் பெருமானது வரிகள் வைரத்தில் பதித்த பொன்னெழுத்துக்களாம்

இத்தாண்டகத்தின் முதல் மூன்று பாடல்கள் இவை

பாடல் 1,2,3

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன் மாலறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால் நீளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறி வாளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே


சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தையுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பு ஒன்றில்லாப்
பெம்மானைக் கைம்மாவினுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


பொருள்

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே

அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.

thirunallaru thiruthandagam

6.20 திருநள்ளாறு திருத்தாண்டகம்


குறிப்பு: திருநள்ளாறு சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்று
நளேச்சுரம், நாகவிடங்கபுரம், தர்ப்பாரண்யம் என்பவை இத்தலத்தின் ஏனையப் பெயர்களாம்

மகாபாரதத்தில் "நளன் வரலாறு" ஒரு கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளது, கலிபுருஷன் என்னும் சனியனால் பின்தொடரப்பெற்ற நளன் திருநள்ளாற்று இறைவனை தரிசிக்கும் பொருட்டு காதலுடன் ஆலயத்திற்குள் நுழையும் போது மேற்கொண்டு தொடர இயலாது "சிவபரம்பொருளுக்கு அஞ்சி" ஆலயவாசலில் சனியன் தங்கிவிட்ட தலம்

ஏழு தேவாரப்பாடல்கள் பெற்றுள்ள மூவராலும் போற்றப் பெற்ற பதி, விடங்கர் சன்னதிக்கு நேரே ஒய்யாரமாக நிற்கும் ஆலலசுந்தரர் பெருமான் திருமேணி அழகினுக்கோர் ஆபரணம்

அனல் வாதத்தில் வாடிப்போகாத பச்சைப் பதிகத்தைக் கொண்ட தலம்  தேவாரம் பாடிய மூவரும் தத்தம் பதிகத்தில் இத்தல இறைவனை முறையே நம்பெருமான், நம்பி, நம்பன் என்று குறித்தழைப்பதால் இதுபற்றி நம்பெருமான் என்பதே திருநள்ளாறு இறைவன் பெயர், தர்ப்பாரண்யேஸ்வரர் என்பது பிற்காலத்தில் வழங்கப் பட்டதாயிருக்கலாம் என்பர் அறிஞர்கள்

பிரமனின் தலைகளுள் ஒன்று ஏதோ தவறாகப் பேசியதால் இறைவன் அதனை கொய்துவிட்ட சிறப்பு செய்தியுடன் துவங்கும் அப்பரடிகள் திருத்தாண்டகத்தின் முதல் மூன்று பாடல்கள் இவை

பாடல் 1,2,3

ஆதிக்கண் நான்முகத்தில் ஒன்று சென்று
அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
சிவலோக நெறிவகுத்துக் காட்டுவானை
மாதிமைய மாதொரு கூறாயினானை
மாமலர்மேல் அயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்று உய்ந்தவாறே.

படையானைப் பாசுபத வேடத்தானைப்
பண்டனங்கற் பார்த்தானைப் பாவமெல்லாம்
அடையாமைக் காப்பானை அடியார் தங்கள்
அருமருந்தை ஆவாவென்று அருள்செய்வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
சங்கத்த முத்தனைய வெள்ளை ஏற்றின்
நடையானை நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.

படஅரவம் ஒன்றுகொண்டு அரையிலார்த்த
பராபரனைப் பைஞ்ஞீலி மேவினானை
அடலரவம் பற்றிக் கடைந்த நஞ்சை
அமுதாக உண்டானை ஆதியானை
மடலரவம் மன்னுபூங் கொன்றை யானை
மாமணியை மாணிக்காய்க் காலன் தன்னை
நடலரவஞ் செய்தானை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே.

பொருள்

ஆதி அந்தணன் எனப்படும் பிரமனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற அம்முகத்தைத் தன் கையையே வாளாகக் கொண்டு போக்கிய வயிரவனாய் , அடியார்கள் அடைவதற்கு மேம்பட்ட சிவலோகம் அடையும் வழியைக் காட்டுவானாய் , விரும்பத்தக்க பார்வதி பாகனாய் , தாமரை மலர் மேல் உள்ள பிரமனும் , திருமாலும் காண முடியாத தலைவனாய்க் குண பூரணனாய்த் திருநள்ளாற்றில் உகந் தருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் தியானம் செய்து துன்பங்களிலிருந்து நீங்கிய செயல் மேம்பட்டதாகும் .

பலபடைக்கலங்களை உடையவனாய்ப் பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய் , முற்காலத்தில் மன்மதன் சாம்பலாகுமாறு அவனை நெற்றிக்கண்ணால் நோக்கியவனாய் , அடியவர்களுக்கு அமுதமாய் அவர்கள் நிலைக்கு ஐயோ என்று இரங்கி அருள் செய்பவனாய்ச் சடையை உடையவனாய் , காளையில் செல்பவனாய்க் குண பூரணனாய் உள்ள நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று 


படமெடுக்கும் பாம்பு ஒன்றனை இடையில் இறுகக்கட்டிய , மேலும் கீழுமாய் நிற்பவனை , பைஞ்ஞீலி என்ற தலத்தை உகந்தருளியவனை , வலிய பாம்பினைக்கொண்டு கடைந்த போது தோன்றிய விடத்தை அமுதம்போல் உண்டவனை , எல்லோருக்கும் முற்பட்டவனை , இதழ்களிலே வண்டுகளின் ஒலி நிறைந்த கொன்றைப் பூவினை அணிந்தவனை , சிறந்த இரத்தினம் போன்று கண்ணுக்கு இனியவனை . மார்க்கண்டேயன் என்ற பிரமசாரியைக் காத்தற்பொருட்டுக் காலனைத் துன்புறுத்தத் தன் கால் சிலம்பு ஒலிக்க அவனை உதைத்தவனை , நள்ளாற்றில் உகந்தருளி யிருப்பவனை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்தவாறே 

agni kaariyam

முதல் தந்திரம் - 14. அக்கினி காரியம்

பாடல் எண் : 9
ஓமத்துள் அங்கியின் உள்ளுளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதங்கொள் வானுளன்
வேமத்துள் அங்கி விளைவு வினைக்கடல்
கோமத் துளங்கிக் குரைகடல் தானே

வேள்வித் தீக்கு உள்ளீடாய் நிற்பவன் எங்கள் சிவபெருமானே; அஃது, அவன் சுடுகாட்டில் தீயில் நின்று ஆடி, சிறந்த உயிரைத் தாங்கி நிற்றலானே அறியப்படும். இவ்வுண்மையை உணராது, உணர்த்துவாரையும் வெகுள்வாரது வெகுளியின்கண் உளதாகின்ற தீயால் விளையும் வினைக்கடல், மந்தரமாகிய பெரிய மத்தால் கலங்கி ஒலித்த கடல் போல்வதாம்.

Inside the Fire of the Homa is my Lord,
Inside too is He seated in the flame of the funeral pyre The two Fires in the sky,
the Sun and the Moon,
The Fire of the Homa checks the sea of karma from expanding