Sunday, May 25, 2014

who are we ? what is ours ?

Thirumurai 8.45

திருவாசகம்-யாத்திரைப் பத்து

பாடல் எண் : 1

பூவார் சென்னி மன்னனெம்
புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய்
உருக்கும் வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய்
ஆட்பட்டீர்வந் தொருப் படுமின்
போவோம் காலம் வந்ததுகாண்
பொய்விட் டுடையான் கழல்புகவே.

பொழிப்புரை :

மலர் நிறைந்த முடியையுடைய அரசனாகிய பாம்பணிந்த எங்கள் பெருமான், சிறியவர்களாகிய நம்மை, இடை யறாமல் உள்ளத்தில் கலந்து உணர்வுருவாய் உருக்குகின்ற பெருகிய கருணையினால், ஐயோ என்று இரங்கியருளப்பட்டு அன்பு உருவாய் ஆட்பட்டவர், நிலையில்லாத வாழ்க்கையை விட்டு நம்மை ஆளாக உடைய இறைவனது திருவடியை அடையக் காலம் வந்துவிட்டது. போவோம். வந்து முற்படுங்கள்.

பாடல் எண் : 2

புகவே வேண்டா புலன்களில்நீர்
புயங்கப் பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம்
வேண்டா போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து
நாயே அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத்
தளரா திருப்பார் தாந்தாமே.

பொழிப்புரை :

நாட்டார் நகை செய்ய, உலகில் எழுந்தருளி நாயைப் போன்ற நம்மை ஆட்கொண்ட பெருமையையுடைய இறைவனை அடைந்தால் அவரவர் தளர்ச்சி நீங்கி இருப்பார்கள். ஆதலின் அடியவர்களே! நீங்கள் ஐம்புல விடயங்களில் செல்ல வேண்டா. பாம்பணிந்த பெருமானுடைய தாமரை மலரை ஒத்த திருவடிகளை மிகுதியாக நினையுங்கள். எஞ்சியவையெல்லாம் நமக்கு வேண்டா. அவைகளை நம்மிடத்திலிருந்து நீங்கும்படி விட்டு விடுங்கள்.

பாடல் எண் : 3

தாமே தமக்குச் சுற்றமும்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

பொழிப்புரை :

ஒவ்வொருவருக்கும் உறவினரும் அவரே. நடை முறைகளை வகுத்துக் கொள்பவரும் அவரே. ஆதலால் அடியவர் களே! நீங்கள், நாம் யார்? எம்முடையது என்பது யாது? பாசம் என்பது எது? இவையெல்லாம் என்ன மயக்கங்கள்? என்று உணர்ந்து இவை நம்மை விட்டு நீங்க இறைவனுடைய பழைய அடியாரொடும் சேர்ந்து அவ்விறைவனது திருவுளக் குறிப்பையே உறுதியாகப் பற்றிக் கொண்டு, பொய் வாழ்வை நீத்துப் பாம்பணிந்தவனும், எமையாள் வோனுமாகிய பெருமானது பொன்போல ஒளிரும் திருவடிக்கீழ் போய்ச் சேரும் நெறியில் பொருந்தி நில்லுங்கள்.

குறிப்புரை :

``தாமே`` என்றது, பொதுமையில் மக்களைச் சுட்டியது. அதனால், `அவரவரே அவரவர்க்கு உறவினரும், விதிமுறையும் ஆவர்` என்பது, முதல் அடியின் பொருளாகும். சுற்றத்தையும், விதியையும் கூறவே, `அவற்றின் மறுதலையாய பகையும், விலக்கும் அவரவர்க்கு அவரவரே` என்பதும் போந்தது. `பிறப்பு வீடு என்னும் இருவகைப் பயன்களையும் முறையே தருவனவாகிய வினையையும், தவத்தையும் செய்து அப்பயன்களைப் பெறுவார் அவரவரே` என்பதனை இவ்வாறு அருளிச் செய்தார்.
``பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்``
என்னும் திருக்குறளும் (505) இப்பொருளையுடையது.
இவ்வாறாயின், ``ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே`` (தி.6 ப.95 பா.3) என்றாற்போலும் திருமொழிகட்குக் கருத் தென்னையோ என்றெழும் ஐயப்பாட்டின்கண் பலர் பலபடத் தம் கருத்தினைப் புலப்படுப்பர். ஆட்டுவிப்பான் ஒருவன் பிறனை ஆட்டுவிக்கின்றுழி, ஆடுவான், முதற்கண்ணே ஆட்டுவிப்பான் குறிப்பின்வழியே ஆடல் இலக்கணம் எல்லாம் நிரம்ப ஆடுதல் இல்லை; முதற்கண் ஆட்டுவிப்பானது குறிப்பினின்றும் பெரிதும் வேறு பட ஆடிப் பின்னரே சிறிது சிறிதாக அவன் குறிப்பின் வழி நிற்கும் நிலையினைப் பெறுவன். அவ்வாறே ஈண்டுமாகலின், அதுபற்றி, ``தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்`` என்றற்கு இழுக்கென்னை என்க. இங்ஙனமல்லாக்கால், `ஆட்டுவிப்பான்` எனவும், `ஆடுவான்` எனவும் பொருள்களை இருவேறாகப் பகுத்துக் கூறுதற்குப் பயன் என்னையோ என்பது. எனவே, ``ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே`` என்றாற்போலும் திருமொழிகட்கு, `ஆடுந் தன்மையுடையானிடத்து அவ் வாடுதற்றொழில் ஆட்டுவிப்பானை யின்றி அமையாதவாறு போல, அறியுந்தன்மையும் செய்யுந் தன்மை யும் உடைய உயிர்களிடத்து அவ்வறிதலும் செய்தலும், அறிவிப் பவனும், செய்விப்பவனுமாகிய இறைவனையின்றி அமையா` என்பதும், `அவ்வாறாயினும், ஆடுதற்றொழிற்கண் உளவாகும் குறைவு நிறைவுகள் ஆடுவானுடையனவன்றி ஆட்டுவிப்பா னுடையனவாகாமை போல அறிதல் செய்தலின்கண் உளவாகும் தீமை நன்மைகள் உயிரினுடையனவன்றி இறைவனுடையன ஆகா` என்பதும், `அங்ஙனமாயினும், அறிவு செயல்களுக்கு இறைவனது அருள் இன்றியமையாமை பற்றி, அவற்றால் விளையும் தீமை நன்மைகளையும் அவனுடையன போல ஒரோவழி முகமனாகக் கூறுவர்` என்பதும், இறைவன் இவ்வாறு உயிர்களை அறிவித்தும், செய்வித்தும் நிற்பது அவற்றிற்கு எவ்வாற்றானும் நன்மை பயப்பதே யாதலின், அவற்றை அவன் எஞ்ஞான்றும் அங்ஙனம் செயற்படுத்தி நிற்பன்` என்பதுமே கருத்தாதல் அறிந்து கொள்க.
`யார்` என்பதன் மரூஉவாகிய `ஆர்` என்பன பலவும், `என்ன பொருள்` என்னும் கருத்தின. `இறைவன் முன்னே, உயிர்களும், அவைகள் `எமது` என்று பற்றுச் செய்தற்கு உரியனவும், அங்ஙனம் பற்றுச் செய்தற்கு ஏதுவாய் அவற்றை மறைத்து நிற்கும் பாசங்களும் பொருளோ` என்றதாம். என்ன மாயம் - இவையெல்லாம் எத்துணை மயக்கங்கள். உயிர், தன்னையே தலைமைப் பொருளாக நினைத்தல் மயக்க உணர்வேயாதல் பற்றி அதனையும், ``மாயம்`` என்றார். `இவை போகப் போமாறு` என இயையும். `பண்டைத் தொண்டர் முன்பே போயி னாராயினும், அவர் போயினவழியே போவோம்` என்பார், ``பண் டைத் தொண்டரொடும் போமாறு`` எனவும், `அவன்றன் குறிப்பு, நம் மைப் பிரிதல் அன்று` என்பார், ``அவன்றன் குறிப்பே குறிக் கொண்டு போமாறு`` எனவும் கூறினார். அமைமின் - ஒருப்படுங்கள். பொய், உலகியல்; `புயங்கனும் ஆள்வானும் ஆகியவனது பொன்னடி` என்க.

பாடல் எண் : 4

அடியார் ஆனீர் எல்லீரும்
அகல விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து
கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச்
சிவலோ கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே.

பொழிப்புரை :

அடியாராகிய நீங்கள் எல்லாரும் உலக இன்பங் களில் ஈடுபட்டுப் பொழுது போக்குகின்ற நிலையை நீங்கிப் போமாறு விட்டு ஒழியுங்கள். மணம் தங்கிய திருவடியை வந்து பொருந்தி திருவுள்ளக் குறிப்பை உறுதியாகப் பற்றிக் கொண்டிருங்கள். திரு வெண்ணீறு பூசப்பெற்ற திருமேனியையுடைய பாம்பணிந்த பெருமான் குற்றம் பொருந்திய உடம்பைப் போகும்படி நீக்கிச் சிவபுரத்தே நம்மை வைப்பான். தன் தாமரை மலர் போன்ற திருவடி நிழலிலே புகும்படி செய்வான்.


பாடல் எண் : 5

விடுமின் வெகுளி வேட்கைநோய்
மிகஓர் காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோ
டுடன்போ வதற்கே ஒருப்படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள்
அணியார் கதவ தடையாமே
புடைபட் டுருகிப் போற்றுவோம்
புயங்கன் ஆள்வான் புகழ்களையே.

பொழிப்புரை :

மேன்மைப்படுவதற்கு இனிமேல் ஒருகாலம் கிடையாது. ஆகையால் சிவலோகத்தின் அழகிய கதவு நமக்கு அடைக்கப்படாதிருக்கும்படி கோபத்தையும் காம நோயையும் விட்டு விடுங்கள். நம்மை உடைய பெருமானுடைய திருவடிக்கீழ் பெரிய கூட்டத்தோடு உடன் செல்வதற்கு மனம் இசையுங்கள். பாம்பை அணிந்தவனும் நம்மை ஆள்பவனுமாகிய இறைவனுடைய பெருமை களை எங்கும் சூழ்ந்து மனமுருகிப் போற்றுவோம். போற்றினால் சிவலோகத்தில் நாம் போய்ச் சேர்ந்து விடுவோம்.

பாடல் எண் : 6

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின்
புயங்கன் தாளே புந்திவைத்திட்
டிகழ்மின் எல்லா அல்லலையும்
இனியோர் இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச்
சென்று சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று
நெஞ்சம் உருகி நிற்போமே.

பொழிப்புரை :

நாம் இனிமேல் ஒரு துன்பம் வந்து சேராவண்ணம் விளங்குகின்ற சிறப்பமைந்த சிவபுரத்துக்குப் போய், சிவபெருமான் திருவடியை வணங்கி அங்கே வாழும் அடியார் முன்னே சென்று மனம் உருகி நிற்போம்; அதற்குப் பாம்பணிந்த பெருமான் திருவடியைப் புகழுங்கள்; வணங்குங்கள். அவைகளுக்கு மலர் சூட்டுங்கள்; அவற்றையே நினைவில் வைத்துக் கொண்டு பிற எல்லாத் துன்பங்களையும் இகழுங்கள்.

பாடல் எண் : 7

நிற்பார் நிற்கநில் லாவுலகில்
நில்லோம் இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே
நிற்கும் பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற்
பெறுதற் கரியன் பெருமானே.

பொழிப்புரை :

அழகினால் தனக்குத் தானே நிகரான திருமேனியையுடைய, பாம்பணிந்த பெருமானது பொன் போன்ற திருவடியை அடைவதற்கு நிற்கின்றவர்களே! நிலையில்லாத உலகின் கண், விரும்புவார் நிற்கட்டும். நாம் இங்கு இனி நிற்க மாட்டோம்; சென்று விடுவோம்; செல்லாமல் தங்கி நின்று பின்பு மனம் வருந்தினால் எம் பெருமான் பெறுதற்கு அரியவனாவான். ஆதலால் எல்லோரும் காலந்தாழ்த்தாது நீங்கள் நினைந்தபடியே செல்ல மனம் இசையுங்கள்.


பாடல் எண் : 8

பெருமான் பேரா னந்தத்துப்
பிரியா திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர்
அம்மா அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவந்
திறந்த போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன்
திருத்தாள் சென்று சேர்வோமே.

பொழிப்புரை :

இறைவனது பேரின்பத்தில் பிரியாமல் மூழ்கி யிருக்கப் பெற்றவர்களே! நீங்கள் அருமையான மயக்கத்தில் பொருந்திப் பின்பு ஐயோ என்று, வருந்தி அலறாவண்ணம் அழகிய சிறந்த மணிகள் இழைக்கப் பெற்ற திருக்கதவு, திறந்திருக்கும் போதே, சிவபுரத்திலுள்ள, திருமாலறியாத, அழகிய பாம்பணிந்த பெருமானது திருவடியை நாம் சென்றடைவோம்.

பாடல் எண் : 9

சேரக் கருதிச் சிந்தனையைத்
திருந்த வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள்
பங்கன் புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத
ஆர்வங் கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே
பொய்யிற் கிடந்து புரளாதே.

பொழிப்புரை :

போரில் விளங்குகின்ற வேல் போன்ற கண்களை யுடைய உமையம்மையின் பாகனும், பாம்பை அணிந்தவனுமாகிய இறைவனது திருவருள் அமுதத்தை நிரம்பப் பருகித் தணியாத ஆசை மிக மூழ்கியிருப்பவர்களே! பொய்யான வாழ்வில் கிடந்து புரளாமல் சிவபெருமானது திருவடியிலே அடைய விரும்புங்கள். அதனையடைய எண்ணிச் சித்தத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு இடைவிடாமல் நினையுங்கள்.

பாடல் எண் : 10

புரள்வார் தொழுவார் புகழ்வாராய்
இன்றே வந்தாள் ஆகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார்
மதிஉட் கலங்கி மயங்குவீர்
தெருள்வீ ராகில் இதுசெய்மின்
சிவலோ கக்கோன் திருப்புயங்கன்
அருள்ஆர் பெறுவார் அகலிடத்தே
அந்தோ அந்தோ அந்தோவே.

பொழிப்புரை :

புரள்பவராயும் வணங்குபவராயும் இப்பொழுதே வந்து ஆட்படாதவர்களாய், மயங்குகின்றவர்களே! பின்பு, அறிவினும் கலக்கமடைந்து மயங்கியிருப்பீர்கள். உங்களை மதிப்பவர் யாவர்?. தெளிவடைய விரும்புவீரானால் எம்பெருமானிடம் ஆட்படுதலாகிய இதனைச் செய்யுங்கள். சிவலோக நாதனாகிய பாம்பணிந்த பெருமானது திருவருளை, அகன்ற உலகின்கண் யார் பெறவல்லார்கள்? ஐயோ! ஐயோ!! ஐயோ!!!.

Flower wreaths bedeck the crown of our sovereign God whose jewels Are serpents;
He has,
with interruption none,
Pervaded our bosoms – the little ones`.
Siva-consciousness Melts us.
Swayed by His flood of mercy,
alas,
alas,
Ye that have been,
in love,
enslaved,
come and consent To foregather concordantly.
Giving up all falsity,
And to gain the ankleted feet of the Lord-Owner,
Time is come.
Well,
let us go.

May You not abide in Your sense-instruments.
Lo,
the jewels of our God are serpents.
So think On His flower-soft and ankleted feet that they Should solely,
wholly and exclusively occupy Your thought.
Ignore all else.
Suffer them to leave you.
He came to earth in all splendour;
such is His Greatness,
that He ruled us who are like dogs.
They alone are masters of their selves,
who are Linked to Him and it is these who will never flag.

They indeed are their kin;
They are indeed the authors Of their destiny.
Lo,
who are we?
What is ours?
What is paasam?
What gramarye is all this?
To get rid of these,
be companied with The traditional servitors of the Sovereign-Lord.
Holding fast His inkling,
prepare yourselves to fare forth.
Removing Your falsity,
the Lord who is decked With snakes will rule by His auric feet.

All ye who are His servitors,
do give up your futile sport;
Reaching His fragrant feet,
keep on holding fast His divine inkling.
Lo,
He will rid us,
once for all,
Of our cruel embodiments and place us in Sivaloka.
He whose jewels are snakes and whose body Is bedaubed with the Holy Ash,
will cause us to get Poised in His flower-laden and ankleted feet.

We are not left with time;
give up wrath And the malady of passion.
With a strong throng Be minded to travel to the feet of the Lord-Owner.
Before the bejewelled doors of Sivapuram Be shut to us,
let us reach it and thither,
In melting love,
hail the eulogia of Him Whose jewels are snakes and who rules us.

Extol Him;
adore Him;
adorn Him with flowers;
Installing only the feet of Him whose jewels Are snakes in your minds,
ignore all worries.
To be rid henceforth of any trouble,
we will reach Splendorous Sivapuram,
adore Siva`s feet,
Proceed to the presence of His servitors that dwell There and thither thrive with melting hearts.

Let them here abide that so desire;
we will not abide In this unabiding world.
This very moment we will Proceed to the auric feet of Him - the Ruler whose jewels Are snakes and whose beautiful and divine frame is but like Unto it alone.
Well,
we will fare forth.
All ye that here Abide,
be minded to foregather without Cunctation.
If you unduly abide here,
your regret Will be of no avail.
Lo,
our God is hard to gain.

O ye who are for ever established in the ever-during Bliss of God !
Alas,
do not later on,
get sunk In delusion and cry hoarse.
Come,
let us Fare forth and reach the sacred feet of the holy God whose jewels are serpents and who is Unknowable to the divine Vishnu,
Even as the hallowed and divine and gem-inlaid doors Of Sivapuram are flung open.

O ye who know no satiety having abundantly Quaffed the nectar of divine grace,
conferred by Our God whose jewels are serpents and who is concorporate With Her whose eyes gleam like the martial spear !
Do not slip into the phenomenal ways and wallow In falsity.
Keep straight your chinta And constantly contemplate the ankleted feet Of Siva with a view to gaining them.

You roll not on holy ground;
adore not;
praise not;
And do not,
this very day.
become His servitors.
Lo,
you are bewildered.
Who will ever esteem you?
O ye who are perplexed as your minds are Agitated !
If you seek saving clarity,
do this:
``Become His devotees.
`` Alas !
Alas !
Who in the world Can at all come by the grace of the Sovereign Of Sivaloka whose jewels are serpents?

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.