Thursday, February 28, 2019

சிங்கத்தை அடக்கி சிவனருள் பெறுக

பத்தாம் திருமுறை

ஏழாம் தந்திரம் - 32. ஐந்திந்திரியம் அடக்கும் அருமை

பாடல் எண் : 4
அஞ்சுள சிங்கம் அடவியில் வாழ்வன
அஞ்சும்போய் மேய்ந்துதம் அஞ்சக மேபுகும்
அஞ்சின் உகிரும் எயிறும் அறுத்திட்டால்
எஞ்சா திறைவனை எய்தலும் ஆமே .

இம்மந்திரமும் பிசிச் செய்யுளே, முன் மந்திரங்களில் களிறுகளாகவும், குதிரைகளாகவும், பறவைகளாகவும் குறிக்கப்பட்ட புலனடக்கம் இல்லாத மனம் இம்மந்திரத்தில் அதனது அடங் காமையின் மிகுதி இனிது விளங்குமாறு சிங்கமாகக் குறிக்கப்பட்டது. அடவி - வேறுபட்ட பல பெருமரங்கள் செறிந்த காடு. அது `நல்லன, தீயன` எனப் பெரும்பான்மையாக இருவகைப்பட்டு, அவற்றுள் எண்ணில வாய் விளையும் வினைகளைக் குறித்தது. நல்வினை, பயன்மரம், தீவினை, நச்சுமரம், வாய்ப்பு உள்ள பொழுது சென்று ஐம்புலன்களை நுகர்கின்ற மனம் வாய்ப்பு இல்லாதபொழுதும் அவற்றையே நாடுதல் பற்றி ``அஞ்சு அகமே புகும்`` என்றார். அஞ்சு - பொறிகள். சிங்கங்கட்கு உகிர் (நகம்) உண்டற்குரிய விலங்குகளை இறுகப் பற்றுதற்கும், எயிறு (பல்) அவ்விலங்கின் தசைகளை உண்டு சுவைத்தற்கும் உதவுவன. எனவே, `அவற்றை அறுத்தல்` என்பது மனத்திற்குப் பொருள்களின் மேல் உளதாய பற்றினையும், அவற்றை நுகர்தற்கண் உளதாய ஈடுபாட்டினையும் நீக்குதலாயிற்று. `நீக்குதற்குக் கருவி சிவயோக சிவானங்கள் என்பது மேல் பல இடங்களில் கூறப்பட்டது. ``அறுத் திட்டால்`` எனவே, ``அறுத்திடல் மிக அரிது`` என்பது விளங்கிற்று. நகமும், பல்லும் போயபின் காட்டில் வாழும் சிங்கங்கள் அங்குச்சென்றோரை அப்பாற் போகவிடாமல் மறித்துக் கொன்றொழிக்க மாட்டா. அதனால் அவர் அக்காட்டைக் கடந்து இன்புறலாம் என்பது பற்றி, ``அறுத்திட்டால் - எஞ்சாது இறைவனை எய்தலும் ஆகும்`` என்றார்.

Senses are Like Roaming Lions

Five the lions that roam the forest
The Five seeking their prey get filled;
And to their caves the Five return;
If the claws and teeth of the Five you pull,
You shall sure the Lord reach.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.