Sunday, July 17, 2016

utraarai yaan venden

39 திருவாசகம்-திருப்புலம்பல்



பாடல் எண் : 1

பூங்கமலத் தயனொடுமால்
    அறியாத நெறியானே
கோங்கலர்சேர் குவிமுலையாள்
    கூறாவெண் ணீறாடி
ஓங்கெயில்சூழ் திருவாரூர்
    உடையானே அடியேன்நின்
பூங்கழல்கள் அவையல்லா
    தெவையாதும் புகழேனே

அழகிய தாமரை மலரிலுள்ள பிரமனோடு, திருமாலும் அறியவொண்ணாத இயல்பையுடையவனே! கோங்க மலர் போன்ற குவிந்த தனங்களையுடைய உமையம்மையின் பாகனே! திருவெண்ணீறு அணிவோனே! உயர்ந்த மதில் சூழ்ந்த திருவாரூரை இடமாக உடையவனே! அடியேனாகிய நான் உனது, தாமரை மலர் போன்ற திருவடிகளாகிய அவற்றையன்றி வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகழமாட்டேன்.

பாடல் எண் : 2
சடையானே தழலாடீ
    தயங்குமூ விலைச்சூலப்
படையானே பரஞ்சோதி
    பசுபதீ மழவெள்ளை
விடையானே விரிபொழில்சூழ்
    பெருந்துறையாய் அடியேன்நான்
உடையானே உனையல்லா
    துறுதுணைமற் றறியேனே

சடாபாரத்தையுடையவனே! அழலாடுவோனே! விளங்குகின்ற மூவிலைகளையுடைய சூலப்படையை யுடையவனே! மேலான சோதியே! பசுபதியே! இளமை பொருந்திய வெண்மையான இடபத்தை யுடையவனே! விரிந்த சோலை சூழ்ந்த திருப்பெருந் துறையில் வீற்றிருப்பவனே! உடையவனே! அடியேனாகிய நான் உன்னையன்றி, வேறு உற்ற துணையை அறிந்திடுவேன் அல்லேன்.

பாடல் எண் : 3
உற்றாரை யான்வேண்டேன்
    ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன்
    கற்பனவும் இனியமையும்
குற்றாலத் தமர்ந்துறையுங்
    கூத்தாஉன் குரைகழற்கே
கற்றாவின் மனம்போலக்
    கசிந்துருக வேண்டுவனே

திருக்குற்றாலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற, கூத்தப் பெருமானே! உறவினரை யான் விரும்புவேனல்லேன்; வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்; புகழை விரும்புவேன் அல்லேன்; கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன். கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும். உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கண் கன்றையுடைய பசுவினது மனத்தைப் போலக் கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.