Tuesday, October 24, 2017

நாட்டில் செல்வம்

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 16. அரசாட்சி முறை

பாடல் எண் : 2
நாடோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாடோறும் நாடி அரன்நெறி நாடானேல்
நாடோறும் நாடு கெடும் மூட நண்ணுமால்
நாடோறுஞ் செல்வம் நரபதி குன்றுமே .

நீதிநூலைக் கற்ற அரசன், அந்நூலின் நோக்கு முதற்கண் வைதிக நெறி மேலும், பின்னர்ச் சிவநெறி மேலும் ஆதலை யறிந்து, நாள்தோறும் தனது நாட்டில் அவை பற்றி நிகழ்வனவற்றை, நாள்தோறும் அயராது ஒற்று முதலியவற்றான் ஆராய்ந்து, அவை செவ்வே நடைபெறச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யானாயின், அவனது நாடும், செல்வமும் நாள்தோறும் பையப் பையக் குறைந்து, இறுதியில் முழுதுங் கெட்டுவிடும். அவற்றிற்குக் காரணம், யாண்டும் பாவச் செய்கையே மலிதலாம்.

The Holy Law daily in strictness observe If he who rules the state fails to seek the Divine way Day by day that land decays in folly envelopt,
Day by day that ruler`s wealth declines and dwindles away.

அமுதூறு மாமழை

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 17. வானச் சிறப்பு

பாடல் எண் : 1
அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறும் காஞ்சிரை ஆங்கது வாமே 

வற்றாத அமுத ஊற்றுப்போலச் சுரந்து பொழிகின்ற பெரிய மழைநீராலே பயன் சுரக்கின்ற பல மரங்கள் இயற்கையாக நிலத்தில் தோன்றி வளர்வனவாம். இனி உழவரால் பயிரிடப்படுகின்ற கமுகு, இனிய நீரைத் தருகின்ற தென்னை, கரும்பு, வாழை முதலியனவும் அம்மழையினாலே மக்கட்கு நிரம்பிய உணவைத் தருவனவாம். இனி எட்டி போன்ற நச்சு மரங்களும் அம்மழையினால் உளவாவனவேயாம்.

பிறர்க்கு ஈந்தது, அதுவே உங்கட்குத் துணையாவது

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பாடல் எண் : 9
பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே

சிவபெருமான் எவ்வுயிர்க்கும் உண்மைப் பற்றாய் உள்ள அறத்தை அஃது அரிய மறைபொருள் (இரகசியம்) என்று, அறநெறியில் நிற்பார்க்கன்றி ஏனையோர்க்கு உணர்த்துதல் இல்லை. அதனை அவன் அருள்வழி நான் பெற்றவாற்றால் உங்கட்குக் கூறுவதாயின், ஒன்றேயாயினும், உங்களால் மனம் பொருந்திப் பிறர்க்கு ஈந்தது உண்டாயின், அதுவே உங்கட்குத் துணையாவது. இன்னும் அப்பெருமான் வகுத்த நன்னெறியை மேற்கொள்ளும் முறைமையும் அதுவேயாம்.

Earthly desires to worldly objects attached,
No end know;
but in charity`s noble way,
Even the little things you give,
sure props provide;
All the rest meekly take as the Lord`s gift for the day.

ilaippinai neekkum iruvazhi undu

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்


பாடல் எண் : 8
திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே

அறம் செய்தற்கு `இல்நிலை, துறவு நிலை` என இரண்டு வழிகள் உண்டு. அவற்றுள் அழிதல் இல்லாது நின்று நிலவும் புகழை உடைய துறவோன், தனக்கும், தன் சுற்றத்திற்கும் பயன் விளையு மாறு செய்யும் தவம், உயிர் கரை காணமாட்டாது அழுந்திக் கிடக்கின்ற வினையாகிய கடலை நீந்துதற்கு அமைந்த தோணியாய், பிறந்தும், இறந்தும் உழலும் இளைப்பினை நீக்கும். இல்லறத்தில் நின்று செய்யும் விருந்தோம்பல் முதலிய அறம் மறுமைக்குத் துணையாய் வரும்.

illaram thuravaram

பத்தாம் திருமுறை
முதல் தந்திரம் - 19. அறஞ்செய்வான் திறம்

பாடல் எண் : 6
துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவறி வாரே  .

மெய்ம்மையை ஆராய்ந்தறியும் அறிவுடையீரே! முற்றத் துறந்தவனுக்குச் சுற்றத் தொடர்பு இல்லை. அதனால் அவன் இறைவனை மறவான். மறவானாகவே அவனுக்குக் கெடுவது யாதும் இல்லை. அங்ஙனம் முற்றத் துறக்கமாட்டாதவன் சுற்றத்தொடு கூடி வாழும்பொழுது அறஞ் செய்யாதே இறந்தொழிவனாயின், அதன் பின்னர் அவனுக்கு அறமேயன்றி அவன் விரும்பிய இன்பமும் இல்லையாம். அவன் தான் வாழுங்காலத்து இறைவனை மறவா திருத்தல் கூடாமையின் இறைவனும் அவனுக்குத் துணைவாரான்; அதனால் அவன் இருமையும் இழப்பன். ஆகவே, நீவிர், `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறங்களின் தன்மையை அறிந்து அவற்றுள் இயன்றதொன்றில் நில்லுங்கள்.

Tuesday, September 19, 2017

piraiyum paampum udai peruman

 5.92 காலபாசக் குறுந்தொகை



குறிப்பு: காலன், கூற்றுவன், யமன், நமன் என்றெல்லாம் அழைக்கப் படும் தருமராசனின் தூதுவர்கள் உயிர்களின் பிரார்த்துவ வாழ்வு முடிகையில் சொர்க்க நரகங்களில் சேர்ப்பதற்காக வந்து பாசக்கயிற்றில் கட்டி இழுத்து செல்வார்கள்

ஆனால் யமனுடைய இந்த அதிகாரம் "திருநீறு பூசிய சிவநேயச் செல்வர்களிடம் செல்லுபடியாகாது"

என் அடியான் உயிரை வவ்வேல் என்று அடல்கூற்று உதைத்தவன் நம் இறைவன் அவன் தம் தமர்களாகிய சிவனடியார்கள் கடுநரகில் வீழ்வதில்லை, ஒரு தரம் "சிவாயநம" என்று சொன்னவர்க்கே சாலோக முக்தி கிடைக்கும் என்னும் போது காலதூதுவர்களுக்கு அடியார்களிடம் என்ன வேலை இருக்க முடியும்!!??

மீறிச் சென்று அடியார்களை துன்புறுத்தினால் யமன் உதைவாங்கி உருண்டோடி ஒழிந்து போனதை நினைத்துப் பாருங்கள் என்று அப்பர் பெருமான் காலதூதுவர்களுக்கு அறிவுரை வழங்குவதாக இக்குறுந்தொகை அமைவதால் இதனை "காலபாசக் குறுந்தொகை" என்கிறோம்

நமன் தூதுவீர்!! என்று எமதூதர்களை அழைத்து அருகே அமர வைத்துக் கொண்ட அப்பரடிகள். இருந்து கேள்மின்!! இன்னுங் கேள்மின்!! மற்றுங் கேள்மின்!! என்று தங்கவைத்து சிவனடியார்கள் இருக்கும் திசைக்குக் கூட சென்றுவிடாதீர்கள் பின் உங்கள் தலைவன் உதை வாங்கியதைப் போல வாங்க வேண்டிவரும் என்று எச்சரித்து இப்பாடல்களை நயமுடன் பாடுகிறார்

பாடல் 3-9

கார்கொள் கொன்றைக் கடிமலர்க் கண்ணியான்
சீர்கொள் நாமஞ் சிவன் என்று அரற்றுவார்
ஆர்கள் ஆகிலுமாக அவர்களை
நீர்கள் சாரப் பெறீர் இங்கு நீங்குமே.

சாற்றினேன் சடை நீண்முடிச் சங்கரன்
சீற்றங் காமன்கண் வைத்தவன் சேவடி
ஆற்றவுங் களிப்பட்ட மனத்தராய்ப்
போற்றி என்று உரைப்பார் புடை போகலே.

இறையென் சொல் மறவேல் நமன் தூதுவீர்
பிறையும் பாம்பும் உடைப்பெருமான் தமர்
நறவம் நாறிய நல்நறுஞ் சாந்திலும்
நிறைய நீறணிவார் எதிர்செல்லலே

வாம தேவன் வளநகர் வைகலும்
காம மொன்று இலராய்க்கை விளக்கொடு
தாமம் தூபமும் தண்நறுஞ் சாந்தமும்
ஏமமும் புனைவார் எதிர் செல்லலே

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன்மின் நமது ஈசனடியரை
விடைகொள் ஊர்தியினான் அடியார்குழாம்
புடைபுகாது நீர் போற்றியே போமினே.

விச்சையாவதும் வேட்கைமை யாவதும்
நிச்சல் நீறணி வாரை நினைப்பதே
அச்சமெய்தி அருகணையாது நீர்
பிச்சை புக்கவன் அன்பரைப் பேணுமே.

இன்னங் கேண்மின் இளம்பிறை சூடிய
மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார்
மன்னும் அஞ்செழுத்தாகிய மந்திரம்
தன்னில் ஒன்று வல்லாரையுஞ் சாரலே.

பொருள்

யமதூததர்களே!!கார்காலத்திலே மலர்கின்ற கொன்றையின் மணமிக்க மலர்களை அணிந்தவனது பெருமை கொண்ட திருநாமமாகிய சிவன் என்று அரற்றுவார் ஆராயினும் ஆக ; அவர்களை நீர் சாரப்பெறாதீர் ; நீங்குவீராக .

சடையோடு கூடிய நீள்முடியுடைய சங்கரனும் , காமனைச் சினந்து எரிசெய்தவனுமாகிய பெருமான் சேவடியைப் போற்றி என்று மிகவும் களிப்புடைய உள்ளத்தவராய் உரைப்பார் பக்கம் நீவிர் செல்லேல் .

நமன் தூதுவர்களே ! என்சொல்லைச் சிறிதும் மறவாதீர் ; பிறையும் பாம்பும் உடையான் தமர்களாகிய தேன் நறுமணம் வீசும் நல்ல நறுவிய சாந்தினைவிட நிறையத் திருநீறு பூசும் அடியவர் எதிரில் கூட நீங்கள் போய்விடாதீர்கள்

வாமதேவனாகிய சிவபெருமான் வளநகராந் திருக்கோயிலில் நாள்தோறும் மனத்தின்கண் வேறொரு விருப்பமும் இல்லாதவராய்க் கைவிளக்கும் , தூபமும் , மாலையும் , தண்ணிய நறுவிய சாந்தமும் , பிற வாசனைப் பொருள்களும் புனைவார் எதிர் நீவிர் செல்லேல் .

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றியகையை உடைய தூதுவர்களே ! நமது ஈசன் அடியரை அடையாதீர் ; இடபத்தை
ஊர்தியாகக்கொண்ட இறைவன் அடியார் குழாத்தின் புடை நீர் போகாமல் அவர்களை வழிபட்டுப் போவீராக .

வித்தையாவதும் , விருப்பத்துக்குரிய தன்மையும் ஆவதும் நாள்தோறும் திருநீறணியும் மெய்யடியாரை நினைப்பதே ; அச்சம் கொண்டு , பிச்சை புகும் பெருமானின் அன்பர்களை நீர் பேணுவீராக .

இன்னும் கேட்பீராக ; இளம் பிறையினைச் சூடிய அருளரசனாகிய சிவபெருமான் திருவடியோடுகூடிய உள்ளத்துடன் ஏத்தி வழிபடுவார்களையும் நிலைபெற்ற திருவைந்தெழுத்தாகிய மந்திரத்தில் ஒன்று வல்லவரையும் நீவிர் சாரவேண்டா .


manthiramum thanthiramum marunthumaagi

6.54 திருப்புள்ளிருக்கு வேளூர் திருத்தாண்டகம்

குறிப்புபுள் ஆகிய சடாயு இருக்காகிய வேதம் வேள் ஆகிய முருகன் ஊராகிய சூரியன் வழிபட்ட தலமாதலின் புள்ளிருக்கு வேளூர் ஆயிற்று

தரணியெங்கும் பிறவிநோயால் பீடிக்கப்பட்ட உயிர்களுக்கு பிணிதீர்க்கும் மகாவைத்தியனான சிவபரம்பொருள் புற்றுருவில் எழுந்தருளியுள்ள தலம்

செல்வமுத்துக்குமர சுவாமி என்னும் அறுமுகச்செவ்வேள் இத்தலத்தின் விசேடமூர்த்தியாவார்

செடியாய உடல் தீர்ப்பான் தீவினைக்கு ஓர் மருந்தாவான் என்பது புகலிப்பிள்ளையர் வாக்கு

கள்ளார்ந்த பூங்கொன்றை என்னும் பாடலில் சிவபரம்பொருளை சாடாயு சம்பாதி பூசித்த திறங்களையும் சீதாபிராட்டியிடம் அத்துமீறிய இராவணனை இப்பறவையோர் பொருதழித்த மகத்துவத்தையும் வியந்தும் பாடியிருப்பார் சம்பந்தப்பெருமான்

ஆண்டானை என்று துவங்கும் அப்பரடிகளின் தாண்டக வரிகள் தமிழ் நூல்களுக்கு ஓர் மணிமகுடமாகத் திகழும் வரிகள்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை மந்திரமும் தந்திரமும் மருந்துமாகி தீராநோய் தீர்த்தருள வல்லான்தன்னை புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே என்று பாடும் அப்பர் பெருமானது வரிகள் வைரத்தில் பதித்த பொன்னெழுத்துக்களாம்

இத்தாண்டகத்தின் முதல் மூன்று பாடல்கள் இவை

பாடல் 1,2,3

ஆண்டானை அடியேனை ஆளாக் கொண்டு
அடியோடு முடியயன் மாலறியா வண்ணம்
நீண்டானை நெடுங்களமா நகரான் தன்னை
நேமிவான் படையால் நீளுரவோன் ஆகங்
கீண்டானைக் கேதாரம் மேவி னானைக்
கேடிலியைக் கிளர்பொறி வாளரவோ டென்பு
பூண்டானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே


சீர்த்தானைச் சிறந்தடியேன் சிந்தையுள்ளே
திகழ்ந்தானைச் சிவன்தன்னைத் தேவதேவைக்
கூர்த்தானைக் கொடுநெடுவேற் கூற்றந் தன்னைக்
குரைகழலாற் குமைத்துமுனி கொண்ட அச்சம்
பேர்த்தானைப் பிறப்பிலியை இறப்பு ஒன்றில்லாப்
பெம்மானைக் கைம்மாவினுரிவை பேணிப்
போர்த்தானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே

பத்திமையாற் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன் தன்னை
எம்மானை என்னுள்ளத்துள்ளே ஊறும்
அத்தேனை அமுதத்தை ஆவின் பாலை
அண்ணிக்குந் தீங்கரும்பை அரனை ஆதிப்
புத்தேளைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே


பொருள்

அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே

அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.

அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.